×

5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ED அலுவலகத்தில் ஆஜராகின்றனர்
 

 

தமிழ்நாட்டில் மண் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ள  முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  மணல் அள்ளுவதன்  மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் கூறப்பட்டது.  இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் என ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கானது கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்டபோது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.  மணல் கொள்ளை வழக்கில் அமலாக்க துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்  என்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கின் விசாரணை வருகிற மே 6ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று(ஏப்.25) சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகின்றனர்.  விசாரணைக்கு அமலாக்கத்துறை முன் ஆட்சியர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தஞ்சை, திருச்சி, அரியலூர், கரூர், வேலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராகின்றனர்.