×

அடுத்தடுத்து கைதாகும் கலவரக்காரர்கள்- வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் உள்ளிட்ட 4 பேர் கைது 

 

கனியாமூர் பள்ளி கலவரத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட 3 வாட்ஸ் அப் குழு  அட்மின்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரம் மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரை நியமித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். 

தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களை சேர்த்து கலவரத்தை தூண்டும் வகையில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம்  துருவூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி,காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் உள்ளிட்ட மூன்று வாட்ஸ் அப் குழு அட்மின்கள் மற்றும் கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதாக புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்யபப்ட்டு, கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர் தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கருத்துக்களை பதிவு செய்த வாட்ஸ் அப் குழு அட்மின்கள் உள்ளிட்ட 16 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே காவல்துறை சார்பில் கலவரத்தில் ஈடுபட்டதாக 20 சிறார்கள் உள்ளிட்ட  306 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலிசார் மற்றும் காவல்துறை சார்பில் இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.