33 கேள்விகள்.. 31 லட்சம் பணியாளர்கள்!நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்..!
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, நாளை (ஏப்ரல் 1) முதல் டிஜிட்டல் முறையில் தொடங்குகிறது. முதற்கட்டமாக டெல்லி, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த முறை பொதுமக்கள் தங்கள் விவரங்களை தாங்களே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் ‘சுய விவரப் பதிவு’ (Self-Enumeration) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக தளத்தில் மொபைல் எண் மூலம் லாக்-இன் செய்து, கேட்கப்படும் 33 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
சுய விவரங்களை வெற்றிகரமாகப் பதிவிடும் நபர்களுக்கு 16 இலக்கத் தனித்துவ அடையாள எண் ஒன்று வழங்கப்படும். பின்னர், கணக்கெடுப்பு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வரும்போது, இந்த 16 இலக்க எண்ணைக் கூறினால் போதுமானது; மீண்டும் அனைத்து விவரங்களையும் அவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, தரவுகளின் துல்லியத்தன்மையையும் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கணக்கெடுப்பின்போது எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜூலை 17-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை ஆன்லைனில் பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணி நடைபெறும். ஒட்டுமொத்தமாக இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள், 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும். இதில் தான் ஜாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில், 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இதற்காக, 33 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான கேள்விகள் பின் அறிவிக்கப்படும்.
பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், பிரிவு 15ன் படி, நீதிமன்ற ஆதாரமாகவோ அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகவோ கேட்டு பெற முடியாது. சைபர் பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன், பொதுமக்களின் தரவுகள் அனைத்தும், ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும்.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. 8-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டே நடத்தியிருக்க வேண்டும், ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.