×

திருமணமான பெண்ணுடன் சாட்டிங் செய்த இளைஞருக்கு அந்தரங்க உறுப்பில் சூடு

 

கள்ளக்குறிச்சி அருகே பக்கத்து வீட்டில் இருந்த திருமணமான இளம் பெண்ணுடன்  வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் ஈடுபட்ட  இளைஞரை நிர்வாணப்படுத்தி அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த பெண்ணின் உறவினர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் காரனூர் கிராமத்தைச் சேர்ந்த  பூவரசன், 21 வயதான இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு  பட்டப்படிப்பு படித்து வருகின்றார். இந்த இளைஞர் அதே ஊரில் உள்ள திருமணமான 26 வயது  பெண்  ஒருவருடன் வாட்ஸ் அப்  சாட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.இது அந்த பெண்ணின்  உறவினருக்கு தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இளைஞர் பூவரசன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதை கண்காணித்த பெண்ணின்  உறவினர்களான   மூன்று இளைஞர்களும் திடீரென இளைஞர் பூவரசனை அந்தப் பெண்ணின் வீட்டிற்குள்ளே பிடித்து அடித்து வாய்,கை ,கால்களை கட்டி நிர்வாணப்படுத்தி பிறகு சொம்பு ஒன்றை எடுத்து அதை கேஸ் அடுப்பில் சூடேற்றி பூவரசனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளனர்.

பூவரசரின் வாய் துணியால் கட்டப்பட்டிருந்ததால் அவரால் கத்தி கூச்சலிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த மூன்று பேரும் பூவரசனின் அந்தரங்க உறுப்பு மற்றும் பின் பகுதியில் எட்டு இடங்களில் சூடு வைத்து காயப்படுத்தி உள்ளனர். பிறகு அந்த மூன்று இளைஞர்களும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்த மூன்று இளைஞர்களும் பூவரசனை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூவரசனை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களும் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.