×

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா

 

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 100க்கு கீழே பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரமாக அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,382 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் 607 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 240பேருக்கும், கோவையில் 89 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 160 மாணவ,மாணவிகளுக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த 3 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியிலும் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.