×

கனியாமூர் தனியார் பள்ளி கலவரம்- மேலும் 3 பேர் கைது

 

கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த நிலையில் இந்த கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கனியாமூர் தனியார்  பள்ளி கலவரத்தின் போது பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்திய லட்சியம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கலவரத்தின் போது இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதுபாலன், காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ஆகிய மூன்று பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது பதிவான வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து கைது செய்துள்ளனர். அவர்களை கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி மூன்று பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.