×

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை... கலங்க வைக்கும் சம்பவம்!!

 

ராணிப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அடுத்த காரை கிராம பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் - குணசுந்தரி  தம்பதி.  இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் மூத்த மகன் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத பன்னீர்செல்வம்-  குணசுந்தரி தம்பதிக்கு இரண்டாவது மகன் ரமேஷ் விபத்தின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில்,  பன்னீர்செல்வம் -குணசுந்தரி தம்பதி பெரிதும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் மீண்டும் ரமேஷுக்கு சிகிச்சை அளிக்க இருந்த நிலையில் ரமேஷ்  தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு  அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மனமுடைந்து, அதே அறையில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்   தெரிவித்ததுடன்,  உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.