×

பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தை அரைகுறையாக புதைப்பு

 

புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் பகுதியில், பிறந்து 29 நாளே ஆன பெண் சிசு அரை குறையாக புதைக்கபட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடலை கைப்பற்றி பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதுச்சேரி அடுத்த  மூர்த்திகுப்பம் புதுக்குப்பம் கடற்கரையில் இன்று பச்சிளம்  குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதனிடையே புதுக்குப்பம் குளத்துக்கு அருகே குடும்பத்துடன் வசிக்கும் நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த குமரேசன்(32), அவரின் 2வது மனைவி சங்கீதா(24) ஆகியோர் தங்கள் குழந்தையை காணவில்லை என தேடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது மணலில் புதைத்து இறந்து கிடந்த குழந்தை தங்களுடையது என தெரிந்து கதறி அழுதனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே  சங்கீதாவை 2வதாக திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதம் முன்பு கர்ப்பிணியான சங்கீதா, தனது தம்பி குடும்பத்துடன் கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார்.

சமுதாய நலக்கூடம் அருகே சில நாட்கள் வசித்துள்ளனர். பின்னர் குளக்கரைக்கு அருகில் வந்து வசித்துள்ளனர். கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய தினம் குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்து கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாகவும் அதன்பின் குழந்தை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குமரேசன், சங்கீதா தம்பதியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா,‌போலீஸ் சூப்பிரண்டு வம்சத்தரெட்டி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.