×

இதனால்தான் விஜய் உச்சநட்சத்திரமாக இருக்கிறார்; விஷாலை விளாசித்தள்ளிய உதவி இயக்குநர்

விஷால் நடித்த பாண்டியநாடு, சக்ரா, துப்பறிவாளன் -2 இணை இயக்குநராக பணிபுரிந்தவர் விஜய் ஆனந்த். இவர் தான் இயக்கவிருக்கும் படத்திற்காக முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கும் படத்தின் தலைப்பை முறைகேடாக விஷால் தனது படத்திற்கு வைத்திருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷாலுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்றை கூறி, இதனால்தான் விஜய் உச்சநட்திரமாக இருக்கிறார் என்று விஷாலை கடுமையாக
 

விஷால் நடித்த பாண்டியநாடு, சக்ரா, துப்பறிவாளன் -2 இணை இயக்குநராக பணிபுரிந்தவர் விஜய் ஆனந்த். இவர் தான் இயக்கவிருக்கும் படத்திற்காக முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கும் படத்தின் தலைப்பை முறைகேடாக விஷால் தனது படத்திற்கு வைத்திருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷாலுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்றை கூறி, இதனால்தான் விஜய் உச்சநட்திரமாக இருக்கிறார் என்று விஷாலை கடுமையாக சாடியிருக்கிறார்.

விஷாலுக்கு விஜய் ஆனந்த் எழுதியிருக்கும் அந்த கடிதம்:

’’இந்தக் கடிதம் உங்கள் மீது களங்கம் கற்பிக்கவோ, காழ்புணர்ச்சி காரணமாகவோ, பிறரின் தூண்டுதலின் பெயரிலோ அல்லது வேறு எந்த உள்நோக்கத்துடனோ எழுதப்பட்டது அல்ல, நான் அடைந்த மன உளைச்சலை எடுத்துரைக்கவும், என் தரப்பு நியாயத்தை பொதுவெளியில் வைப்பதற்காகவும் மட்டுமே எழுதினேன் என்பதை விட எழுத வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றுரைப்பதே பொருத்தமாக இருக்கும்,

நான் இதுவரை எட்டு படங்களுக்கு மேல் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். அவற்றுள் தங்களது பாண்டிய நாடு மற்றும் சமீபத்தில் வெளியான சக்ரா ஆகிய இருபடங்களிலும் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். மேலும் நீங்கள் இயக்கும் துப்பறிவாளன்2, படத்திலும் நீங்கள் கேட்டுக் கொண்டதின் பெயரில் இணை இயக்குனராக இரண்டு மாதங்கள் PRE PRODUCTION பணியாற்றிக் கொடுத்தேன். ஒரு சில காரணங்களால் அந்தப் படம் தொடர்ந்து தள்ளிச் சென்ற நிலையில் நான் இயக்கவிருக்கும் எனது படத்திற்கான ஆயத்த பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தேன், அந்தச் சூழலில்தான் கடந்த மாதம் நண்பர்கள் மூலமாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்தது.

அதாவது நான் எனது கதைக்காக ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து சந்தா கட்டி புதுப்பித்து வந்த COMMON MAN எனும் டைட்டிலை பயன்படுத்தி புதியதாக விஷால் அவர்களின் படத்தின் அறிவிப்பு வெளி வந்திருப்பதாக அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து அதைப் பார்த்த பொழுது தங்களது தயாரிப்பு நிறுவனமான VFFல் உங்களது அடுத்த படமான #VISHAL 31 படத்தின் அறிவிப்பு NOT A COMMON MAN எனும் TAGLINE உடன் MOTION POSTER வடிவத்தில் வந்திருந்தது.

VFF நிறுவனத்தின் சார்பாக எனது தலைப்பான COMMON MANஐ அந்நிறுவனத்தின் அடுத்த படமான #VISHAL 31 க்கு தலைப்பாக பதிவு செய்ய முயற்சித்து அது கிடைக்காத காரணத்தினால் NOT A COMMON MAN எனும் பெயரில் அறிவிப்பு வெளியாகப் போவதாக செய்தி எனக்கு முன்னதாகவே வந்திருந்த நிலையில் அது தொடர்பாக உங்கள் மேலாளரையும், சம்பந்தப்பட்ட இயக்குனரையும் அணுகியபோது சரியான பதில் கிடைக்காத நிலையில் நான் உங்களுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் தலைப்பு என்னிடம் இருப்பதையும் வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக உபயோகித்து கொள்ளலாம் என்றும், திரித்து பயன்படுத்துவது சரி அல்ல என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு தாங்கள் அந்த தலைப்பை பயன்படுத்த போவதில்லை என்று தெளிவாக பதில் அளித்திருந்த நிலையில், ஒரு வார இடைவெளியில் இப்படி ஒரு MOTION POSTER வெளிவந்தது முதல் அதிர்ச்சி.

இரண்டாவதாக சக்ரா படத்தின் இறுதிக்கட்ட பணிகளின் போது, COMMON MAN எனும் தலைப்புடைய என்னுடைய கதையை முழுமையாக தங்களது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்களிடம் கூறி இருந்தேன், அதோடு அல்லாமல் ஒரு MOTION POSTERஐயும் தங்களுக்கு அனுப்பி இருந்தேன், மேலும் தாங்கள் கதையின் சாராம்சத்தை கேட்டுவிட்டு, அந்தக் கதையை சமீபத்தில் மறைந்த தயாரிப்பாளர் பாலு (KB FILMS) அவர்களிடம் கூறுமாறு கேட்டுக் கொண்டதின் பெயரில் அவரிடமும் முழுமையாக சொல்லி இருந்தேன், ஆக அந்தத் தலைப்பை நான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதும், அந்தக் கதையின் சாராம்சமும் தங்களுக்கும் தங்களது நிர்வாக வட்டத்திற்கும், நன்கு தெரிந்த ஒரு விஷயமாகும். அதையும் மீறி NOT A COMMON MAN என்ற தலைப்புடன் MOTION POSTER வெளி வந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தப் போஸ்டரைப் பார்த்தவுடன் நேரடியாக தங்களிடமே இப்படி ஒரு விஷயம் நடந்தது எப்படி? என்பது குறித்து தெளிவுபடுத்திக் கொள்வதற்காக தங்களுக்கு VOICE MESSAGE ஒன்று அனுப்பியிருந்தேன், ஆனால் அதற்கு இன்று வரை தாங்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

தற்போது கடந்த நான்கு நாட்களாக #VISHAL 31 படத்தின் படப்பிடிப்பை HYDERABAD RAMOJI FILM சிட்டியில் மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், மேலும் சில காட்சிகளையும் உள்ளடக்கிய தனித்தனியாக இரண்டு PROMO VIDEOக்கள் VFF _ YOUTUBE தளத்தில் மீண்டும் அதே “NOT A COMMON MAN” என்னும் தலைப்புடன் வெளியாகி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது

இது வெறும் தலைப்பு மட்டும் அல்ல ஒரு CREATORன் பதினைந்து வருட உழைப்பு. எனது தலைப்பு பறிபோகிறதே என்பதைவிடவும் மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது தங்களது அணுகுமுறைதான், தங்களிடமே இருந்து உண்மையாக உழைத்து, தங்களிடமே நான் கூறிய ஒரு தலைப்பை எனக்கு தெரியாமல் உபயோகித்ததோடு அல்லாமல் அதை பதிவு செய்யவும் முயற்சித்தது இன்னும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

என்னிடம் தலைப்பு வேண்டும் என்று கேட்டிருந்தால் நானே மகிழ்ச்சியுடன் அளித்திருப்பேன், ஆனால் என்னையும் எனது உழைப்பையும் ஒரு பொருட்டாக கூட எண்ணாமல், நினைத்ததை செய்யலாம் எனும் அந்த மேல்வர்க்க மனப்பான்மைதான் இங்கே பெரும் பிரச்சனையாகி நிற்கிறது, நான் எழுதிய கதையின் சாராம்சமும் இதை தழுவியே வருவதாலோ என்னவோ இதை சாதாரணமாக கடந்து செல்ல மனம் மறுக்கிறது.

இந்த இடத்தில் எனது அனுபவத்தில் பார்த்த ஒரு விஷயத்தை உதாரணமாக கூற விரும்புகிறேன், பரதன் அவர்கள் இயக்கத்தில் விஜய் சார் அவர்களது நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் , பைரவா ஆகிய படங்களில் பணிபுரிந்ததால், நான் தெரிந்து கொண்ட விஷயம் இது, தனது கில்லி திரைப்படத்தின் வசனகர்த்தாவான பரதன் அவர்கள் தான் இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, விஜய் சார் அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் மதுர படத்திற்கான வசனங்களை எழுதினார், அந்தத் திரைப்படம் முடிந்த பின்னர் தான் கேட்டுக் கொண்டதற்காக தனது படத்தில் பணியாற்ற சம்மதித்த பரதன் அவர்களை தானே இயக்குனர் ஆக்க வேண்டும் என்று முடிவு செய்து, தானாக முன் சென்று அவரது இயக்கத்தில் நடித்த படம் தான் அழகிய தமிழ் மகன். ஆகவே ஒரு கிரியேட்டருக்கு உண்டான மரியாதையும், அடுத்தவர் உழைப்பை மதிக்கும் தன்மையும், நியாய உணர்வும் மிகுந்தவர் என்பதால்தான் இன்று அவர் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

எப்பொழுதும் நியாயத்தின் பக்கமே நிற்பதாக கூறும் தாங்கள் இந்த சிறு விஷயத்தில் நேர்மை பிறழ்ந்தது ஏன்?, திரைத்துறையில் இரண்டு சங்ககளுக்கு பொறுப்பு வகித்த தாங்கள், உங்கள் கண் முன் இப்படி ஒரு அநீதியை அனுமதிப்பது சரியா? இதே தலைப்பை சில நாட்களுக்கு முன் இயக்குனர் A.VENKATESH அவர்கள் தனது “ரஜினி” பட போஸ்டரில் ” A COMMON MAN” என்பதை Tagline ஆக பயன்படுத்தி இருந்தார், நான் தொடர்பு கொண்டு பேசியவுடன் உடனே அதை நீக்கி போஸ்டர்களை திருத்தி அச்சிட்டு மீண்டும் வெளியிட்டார், அந்த பெருந்தன்மை தங்களிடம் இல்லாதது ஏன்?

பதிவு செய்யப்பட்ட தலைப்பை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றால், அந்த நடைமுறை எதற்கு? மேலும் உங்களது தலைப்பை “NOT A THUPPARIVAALAN” என்று யாராவது பயன்படுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா? மேலும் நான் ஏற்கனவே முழு கதையையும் தங்களுக்கும் தங்களது நிர்வாகத்திற்கும் கூறி இருப்பதால் தலைப்பை திரித்து பயன்படுத்தியது போல் கதையிலும் சில பகுதிகளை திரித்து உபயோகித்திருக்கலாமோ எனும் ஐயம் எனக்கு எழுவதில் என்ன தவறு ?

மேற்குறிப்பிட்ட எனது வாதங்களும் சந்தேகங்களும் முழுக்க முழுக்க உங்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் விளைந்தவை. இதற்கு தீர்வு என்னவென்றால் சங்க விதிகளுக்கும் , மனசாட்சிக்கும் உட்பட்டு மேற்சொன்ன “NOT A COMMON MAN” என்னும் டைட்டிலோடு இதுவரை வந்த பதிவுகளை நீக்கிவிட்டு, மேற்கொண்டு அந்த தலைப்பையோ அல்லது கதையின் மற்ற அம்சங்களையோ உபயோகிக்காமல் நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். மேற்கொண்டு முன்போலவே இந்த கடிதத்தையும் பொருட்படுத்தாமல் அலட்சியப் போக்குடன் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் அடுத்த கட்டமாக எழுத்தாளர், தயாரிப்பாளர் , இயக்குனர் சங்கங்களில் முறைப்படி புகார் அளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.’’