×

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை!!
 

 

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலையாகியுள்ளனர். 

தமிழக மீனவர்கள் எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.  இது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்பதுடன், தமிழக மீனவர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய , மாநில அரசுகளை மீனவ சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.  அதேபோல் இலங்கை கடற்படையின் அடாவடிதனத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதத்தின் வாயிலாக அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்  21ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,  மீனவர்களின் சிறைக்காவல் இன்றுடன்  முடிவடைந்தது.  இந்த சூழலில் காவலை மேலும் நீடிக்காமல் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் மீனவர்களை விடுதலை செய்துள்ளது.  விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் மூலம் விமானத்தில் தாயகம் அனுப்பிவைக்கப்படுவர். முன்னதாக  கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ,ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 56 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி  விடுதலை செய்தது. அவர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டு சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.