வழக்கமான கொண்ட்டாட்டத்துடன் தொடங்கி தடம் புரண்ட 2020
ட்வென்டி 20 என பெயருக்கேற்றார்போல அதிரடி மற்றும் விறுவிறுப்பான மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு, வாழ்வின் சகலத்தையும் அணை போட்டுத் தடுத்தது கொரோனா பொதுமுடக்கம். வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என அரசே உத்தவிட, இதுவரை அறிந்திடாத ஒரு விஷயத்தால் வெறுத்துப் போயினர் தமிழக மக்கள். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, குடியரசுத் தினம் என வழக்கமான கொண்டாட்டங்களுடன்தான் 2020ஆம் ஆண்டின் முதல் மாதம் தொடங்கியது. பிப்ரவரியும் பெரிய மாற்றமின்றி கடந்தது. அதன் பின்னர், கொரோனா எனும் நோய்த் தொற்று பரவலால், மறக்க முடியாத மாதமாக ஒவ்வொருவரின் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது மார்ச் மாதம். சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த முதல் நபர் மார்ச் 7ஆம் தேதி பாதிக்கப்பட்டார். ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிப்பு படிப்படியாக அதிகரித்தது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் முன்னோட்டமாக மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் பொது முடக்கமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சகல போக்குவரத்துகளும் நிறுத்தம், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் நாடே ஸ்தம்பித்தது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டும் நேரக்கட்டுப்பாடுகடள் செயல்பட்டன. ஏப்ரல், மே என பொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட, வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.