×

சீரான மின்சாரம் : ரூ.517 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்கள்!!

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 517 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் . மேலும் 39 துணை மின் நிலையங்களில் 712 எம்விஏ அளவிற்கு திறன் அதிகரிக்க 141 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 எண்ணிக்கையிலான திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் எந்தவித தடையுமின்றி மின்சாரம் கிடைக்க செய்யும் நோக்குடன், அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்றவாறு தற்போது உள்ள மின் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டும் ,தரம் உயர்த்தப்பட்டும், மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டும் வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின் பாதையில் ஏற்படுகின்ற மின் இணைப்பையும் மின் பராமரிப்பு செலவையும் குறைத்து தேவைப்படுகின்ற உச்சபட்ச மின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும்,  சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கூடுதல் துணை மின் நிலையம் அமைப்பது சீரான மின் வினியோகத்தை அவசியமாகும் என்பதை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணைமின் நிலையங்கள் அமைத்தல்,  இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்மாற்றிகளின் திறன் அதிகரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது.

659 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கான  மின் திட்டங்கள் மூலம் பகுதிவாழ் மக்கள் தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு மக்களுக்கு தரமான தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை ஏற்படும். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு , எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.