×

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி

 

அருணாச்சலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் சங்கே கிராமத்தில் இருந்து  நேற்று காலை 9  மணியளவில் ராணுவ ஹெலிக்காப்டரில்  லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோர், அசாம் மாநிலம் சோனிப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளனர். ஆனால் புறப்பட்ட 15 நிமிடங்களில்  விமானிகள் உடனான தகவல் இணைப்பு தொடர்பை இழந்துள்ளது.  இதனையடுத்து  போம்டிலாவின் மேற்கே மண்டலா ஹில்ஸ் பகுதிக்கு அருகே ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.  விபத்தில் இறந்த விமானிகள் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்பது  அடையாளம் காணப்பட்டது. இதில் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டில் உள்ள தேடி மாவட்டத்தைச்  சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

ஜெயந்த் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அருணாச்சலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படும்” என அறிவித்துள்ளார்.