2 வயது குழந்தையை கடத்திய கும்பல்... திடீர் ட்விஸ்ட்டாக நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றதால் பரபரப்பு
கடலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பத்திரக்கோட்டை பகுதியில் இன்று காலை 2 வயது பெண் குழந்தை சாலையில் விளையாடி கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், திடீரென்று பெண் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தேடிக்கொண்டிருந்தனர். அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் பெண் குழந்தையை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதாக கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக நடுவீரப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிரமாக சோதனை சாவடிகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த மர்ம நபர் கடலூர் அடுத்த புலியூர் காட்டு சாகை அம்பலவாணன் பேட்டை பகுதியில் குழந்தையை இறக்கிவிட்டு சென்றுள்ளார். 2 வயது பெண் குழந்தை சாலை ஓரத்தில் யாரும் இல்லாமல் தனியாக நின்று இருந்த குழந்தையை அவ்வழியாக சென்ற அன்பு என்ற இளைஞர் மீட்டு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தகவல் கிடைத்ததை தொடர்ந்து நடுவீரப்பட்டு போலீசார் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கடத்தப்பட்ட இரண்டு வயது குழந்தை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இரண்டு வயது குழந்தையை உடனடியாக கடலூர் குள்ளஞ்சாவடி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நலமுடன் இருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த குழந்தை தற்பொழுது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் குழந்தையை சாலை ஓரத்தில் இருந்து மீட்டுக் கொடுத்த அன்பு என்ற வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடுவீரப்பட்டு மற்றும் குள்ளஞ்சாவடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் மோட்டார் சைக்கிளை பிடிப்பதற்காக விசாரணை நடத்திய போலீசார் சம்பவ இடத்தில் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டதில் அப்பாச்சி பைக்கில் கடத்தப்பட்ட குழந்தையை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு ஒட்டி சென்றது தெரியவந்ததின்பேரில் தொடர் விசாரணை மூலம் மேற்படி மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டு, வழக்கில் தொடர்புடைய வெற்றிவேல் (வயது 27), த/பெ, ஜெகதீஸ்வரன் மேற்குதெரு, புலியூர் என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில் குழந்தை கழுத்தில் அணிந்து பவுன் தாயத்திற்காக கடத்தியதாக தெரிய வருகிறது. குழந்தை கழுத்தில் அணிந்து இருந்த பவுன் தாயத்து கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட அப்பாச்சி பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.