×

ஓசூர் அருகே சுவர் இடிந்து 12 வயது சிறுமி உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு

 

ஒசூர் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து 12 வயது சிறுமி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரசீதா (35) என்ற பெண்ணும், தேன்கனிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சஹானா என்பவரும் பலியாயினர். ரசீதாவும் அவரது உறவினர்களும்  தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற உருஸ் திருவிழாவில் பொம்மைகளை விற்பனை செய்ய வந்துள்ளனர். சிறுமி சகானா அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். படுகாயம் அடைந்த சிறுமி சஹானா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுவர் இடிந்து விழுந்ததில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரபிக்குள் இஸ்லாம் (22), தேன்கனிக்கோட்டை சேர்ந்த ஹேமாவதி (12) உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்