×

பிளஸ் 2 மாணவன் உயிரிழந்த விவகாரம் - உடற்கல்வி ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

 

நெல்லை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்கள் இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். 
 
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த 17 வயதான செல்வசூர்யா,  பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்த நிலையில்,  கடந்த 25-ந் தேதி 12 -ம் வகுப்பு மாணவருக்கும், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கும் இடையே கையில் சாதி கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பலத்த காயமடைந்த செல்வசூர்யா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாப்பாகுடி காவல் நிலைய போலீசார், 12 -ம் வகுப்பு மாணவனை தாக்கிய 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.  


 
இந்நிலையில், மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபா பாக்கியமேரி, தமிழ் செல்வன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும்
பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.