×

ஒரே நாளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 2.66 லட்சம் பேர் பயணம்

 

ஒரே நாளில் சென்னை மெட்ரோ இரயில்களில் 2.66 லட்சம் பேர் பயணித்தார்கள் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இதுநாள் வரை இல்லாத அளவு (13.01.2023) அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,66,464 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 21,731 பயணிகளும், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,649 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 13,607 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 12,909 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.