×

இந்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!!

 

மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் அளிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை ஆய்வை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னையில் 66ஆயிரம் மின் இணைப்பு தரகளுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு , 38ஆயிரம் இணைப்புதாரர்களுக்கு தற்போது மீண்டும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.  நிறுத்தப்பட்டுள்ள மீதமுள்ள 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும்  பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 2015 - 16 ஆம் ஆண்டுகளில்  தடைபட்ட மின்சாரம் இரண்டு வார காலத்துக்குப் பிறகே சரியானது . ஆனால் தற்போது உடனுக்குடன் மின்சாரம் சீர்செய்யப்பட்டு மக்களுக்கு மின்வினியோகம் அளிக்கப்பட்டுள்ளது. மழை  பாதிப்பால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.  இதை ஈடு செய்யும் விதமாக தூத்துக்குடி ,மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது . இன்று பிற்பகல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும்.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.  இந்த உத்தரவு குறித்து அந்தந்த மின்வாரிய அலுவலகத்துக்கு இன்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும்" என்றார்.