×

அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுப்பு - தமிழ்நாடு அரசு அனுமதி!

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அரசு சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. அதேபோல அரசு ஊழியர்கள் வீட்டியிலேயே இருந்தனர். அவர்களுக்கு அது பணிக்காலமாகவே கருதப்பட்டது. இருப்பினும் காவல் துறையினர், மருத்துவ துறையினர், நியாயவிலைக் கடை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு துறையைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதால் அவர்கள் மட்டுமே ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டார்கள். இதற்குப் பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு அரசு நிறுவனங்கள் இயக்கப்பட்டன.

சுழற்சி அடிப்படையில் அரசு ஊழியர்கள் பணி செய்து வந்தனர். இதனிடையே தங்களுக்கோ தங்களது குடும்பத்தினருக்கோ கொரோனா ஏற்பட்டால் எவ்வாறு விடுப்பு எடுப்பது என்ற சந்தேகம் அரசு ஊழியர்களுக்கு எழுந்தது. அரசு ஊழியர்கள் சங்கம் இதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave) வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை ஏற்று அப்போதைய அதிமுக அரசு, கொரோனா தனிமைப்படுத்தும் காலமான 14 நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக எடுத்துக்கொள்ளுமாறு அரசாணை வெளியிட்டது.

ஆனால் இந்த சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணையின்படி விடுப்பு கேட்பவர்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதுதொடர்பாக செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர், முதலமைச்சரின் தனிப்பிரிவு வாயிலாக கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணைக்கு விளக்கம் கேட்டு மனு அனுப்பியுள்ளார். அதற்கு அரசு ஊழியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்று தனிப்பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இனி அரசு ஊழியர்களுக்கு இந்த தற்செயல் விடுப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.