×

விசாரணைக் கைதி விக்னேஷின் உடலில் 13 காயங்கள் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

 

சென்னையில்  மர்மமான முறையில்  உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின்  உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது   பிரேத பரிசோதனை முடிவில்  தெரியவந்துள்ளது.  

கடந்த 18-ம் தேதி இரவு சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியைச் சேர்ந்த காவலர்கள்  பெருமாள், பொன்ராஜ்  ஆகியோர்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு 11.30 மணியளவில் அவ்வழியாக  ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரையும் மறித்து சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி போன்றவை இருந்துள்ளது.  இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 இந்த நிலையில், திடீரென விக்னேஷுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.  ஆனால்  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்  வழியிலேயே  விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானது.   இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  பின்னர் அவரது உடல் ஐஸ் ஹவுஸ் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  

முதலமைச்சரும் விக்னேஷின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.  பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணை   மாற்றப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர்,  விக்னேஷுக்கு வாந்தி வலிப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்திருப்பதும் தெரியவந்தது.  

இந்த நிலையில்தான்,  விக்னேஷ்  காவல்நிலையத்திலிருந்து தப்பி ஓட முயல்வது போலவும்,  அவரை போலீஸார் விரட்டிப் பிடிப்பது போலவும்  சி.சி.டி.வி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.  உயிரிழந்த விக்னேஷின்  பிரேத பரிசோதனை  அறிக்கை  தற்போது  வெளியாகியுள்ளது. அதில், விக்னேஷின் உடலில் தலை, கண்புருவம், இடது கை, தாடை உள்ளிட்ட 13 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்,  ரத்தக்கட்டு காணப்படுவதாகவும், லத்தியால் தாக்கிய அடையாளங்கள் உடலில் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.