×

அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவர்கள் திடீர் மயக்கம்!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோமலாபுரம் கிராமம் உள்ளது. அப்பகுதியில் அரசு அங்கன்வாடி ஒன்று செயல்படுகிறது.  இந்த அங்கன்வாடி பள்ளியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இங்கு தினமும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது வழக்கம். வழக்கம்போலவே இன்று மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு மதிய உணவு சாப்பிட்ட 13 பேர் திடீரென மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக தகவல் தெரிந்து அங்கன்வாடிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மாணவர்களை அனுமதித்தனர். மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். இருப்பினும் சத்துணவு ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயக்கமடைந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிகளவில் கூடியதால் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக இருந்தது.