×

தாய் திட்டியதால் 13-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சிறுமி

 

தாய் திட்டியதால் மனமுடைந்த சிறுமி 13வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் டி பிளாக் 13-வது மாடியில் No-311ல் வசிப்பவர் மோகன் - சூர்யா தம்பதியினர். மோகன் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களது 17 வயது மகள் (தாரணி) அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்வில் பங்கேற்க தயாராகி வந்தார். 

இந்த நிலையில் ஹால் டிக்கெட் பெற நேற்று 12 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்ற சிறுமி, பொது தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்கி கொண்டு இரவு 8:45 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தாயார், ஏன் இவ்வளவு லேட் ஆக வருகிறாய் ? என்று கேட்டு திட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி (தாரணி) 13-வது மாடியில் இருந்து இரவு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் தலை, கை, கால்கள் மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுமியை உடனடியாக அழைத்து சென்று, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அறித்த துடியலூர் போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டனர். தாய் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்த சிறுமியால் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.