×

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.. 

 

தமிழகம் முழுவதும்  12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தேர்வை 8.51 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.  

2022- 23 ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள்  இந்த மாதம் தொடங்குகிறது.  நடப்பாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு இன்று ( மார்ச் 13 ) தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. இன்று  ( திங்கள் கிழமை) தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்களாக  8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.  தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து  747 பேர் எழுதுகின்றனர். அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத உள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 405 பள்ளிகளில் 45 ஆயிரத்து 982 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும்  3,225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2 ஆயிரத்து 269 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் விவரங்களை சரிபார்ப்பதற்கும்,  வினாத்தாள் வாசிக்கவும்  வழக்கப்படும். இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

முதல்நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறுகிறது. ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர் நாளை மறுநாள் ஆங்கிலத்தேர்வு நடபெற உள்ளது.  தொடர்ந்து  ஏப்ரல் 3ம் தேதி வேதியியல், புவியியல் பாடத் தேர்வுகளுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.  மேலும்,   தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

* தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது
* ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
* விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும் ,  எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.
* விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது
* மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும்.
* அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
*அறிவுரையை மீறி தேர்வர்களோ, ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.