×

பிரச்சாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர்... வீட்டில் குதித்து 122 சவரன் நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்

 

நேற்று இரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளர் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜை ஆதரித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து திருடியதாக கூறப்படுகிறது. வேட்பாளர் வீட்டில் களவு போன சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினர் தகவல் அளித்தனர் சம்பவம் குறித்த தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் குருசாமி தலைமையில் நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வீட்டிலிருந்த 122 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. 

விசாரணையின் ஒரு பகுதியாக கைரேகை நிபுணர் எஸ்.ஐ. சுரேஷ்குமார் மற்றும் மோப்ப நாய் ராணி ஆகியவை வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடயங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வத்சலாதேவி (30) கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வீட்டில் இருந்தால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து திருட்டு கும்பலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.