×

10ம் வகுப்பு மாணவர்களே..! இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் - தேர்வுத்துறை..!

 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்  என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் இன்று மே 22, 2026 முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன.

தங்களுடைய மதிப்பெண்களில் கூடுதல் சரிபார்ப்பு தேவை என்று கருதும் மாணவர்கள், தங்களுடைய விடைத்தாள் நகலை பெற்றுக் கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் தேவைப்படும் மாணவர்கள் இன்று மே 22, 2026 முதல் மே 27, 2026 வரையிலான தேதிகளில் அதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, அதில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுமதிப்பீடு அல்லது மறுமொத்தக் கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான கட்டணங்களைச் செலுத்தி ஜூன் 17, 2026 முதல் ஜூன் 19, 2026 வரையிலான காலக்கட்டத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் அல்லது தங்களுடைய மதிப்பெண்களை இன்னும் உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் தற்காலிக துணைத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த துணைத்தேர்வானது வரும் ஜூலை 8, 2026 அன்று தொடங்கி ஜூலை 15, 2026 வரை நடைபெறும். இத்துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் மே 26, 2026 முதல் ஜூன் 9, 2026 வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.