1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு… இன்று முதல் 4 நாட்களுக்கு விநியோகம்!
பொங்கல் பண்டிகைக்கான அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, செங்கரும்புடன் ரூ.1000 பணம் வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்க கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கான அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, செங்கரும்புடன் ரூ.1000 பணம் வழங்கப்படவுள்ளது.
இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரையிலான 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13ஆம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நாளை நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை இல்லை என்பது கவனிக்கத்தக்கது.