×

நாய் கீறல் தானே என்ற அலட்சியம் வேண்டாம் - +1 மாணவி ரேபிஸ் தாக்கி உயிரிழப்பு..!  

 

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுடைய 16 வயது மகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தங்களது வளர்ப்பு நாயுடன் மாணவி விளையாடும் போது, நாய் நகத்தால் கீறியுள்ளது. ஆனால், இதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாத அந்த மாணவி, இது குறித்து பெற்றோரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மாணவிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருந்துகள் கொடுத்தும் காய்ச்சல் குணமாகததால், அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மாணவி சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், மாணவி உடலில் 'ரேபிஸ்' வைரஸ் தாக்கம் இருப்பதால், அவரது உடலை பெற்றோரிடம் வழங்க அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

பின்னர், மதுரை தத்தனேரி சுடுகாட்டில் மாணவியின் உடல் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி மாணவி நாய்க்கடி தடுப்பூசி செலுத்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வளர்ப்பு நாய் நகம் கீறி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.