ராஜஸ்தான் அணியை வீழ்த்திய சென்னை: ஹாட்ரிக் வெற்றியால் ரசிகர்கள் உற்சாகம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்று பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்று பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின், நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச தீர்மானிக்க, சென்னை அணி பேட்டிங் செய்தது.
அப்போது தொடக்க வீரர்களாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு ஒரு ரன்னிலும், வாட்சன் 13 ரன்னிலும் பெவிலியன் திரும்ப சென்னை அணி 22 ரன்களில் 3 விக்கெட்டை இழந்து இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய ரெய்னா – தோனி ஜோடி, சென்னையை அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இதையடுத்து ரெய்னா 36 ரன்னில் அவுட்டாக , தோனி அசத்தலாக ஆடி அரை சதம் அடித்தார். பின்பு ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள், ரஹானே, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி 39 ரன்கள் எடுத்தார். இதைப் போல் ஸ்டீவன் ஸ்மித் சென்னை அணியின் பந்து வீச்சை பவுண்டரியாக மாற்றி கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அவரை தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து சென்னை வீரர்களுக்குப் பயத்தைக் கொடுக்க, அதை முறியடிக்கும் விதமாக களமிறங்கிய பிராவோ அவரை அவுட் செய்தார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியதால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரை சென்னை அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
இதையும் வாசிக்க: கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!