பசித்த வயிறு…பணமில்லா வாழ்க்கை.. சிஎஸ்கே வீரரின் நெகிழ்ச்சி பதிவு!
ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்துக் கூறியுள்ளார்.
சென்னை: ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்துக் கூறியுள்ளார்.
கத்தார், தோஹாவில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வீராங்கனை கோமதி. வறுமையான குடும்பத்தில் பிறந்த கோமதிக்கு விளையாட்டில் மீது இருந்த மிகுந்த ஆர்வத்தினாலும், தொடர் முயற்சியினாலும் ஆசிய போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கோமதியின் இந்த வெற்றியைத் தமிழகமே கொண்டாடி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கோமதிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக திமுக சார்பில் கோமதிக்கு 10 லட்சம் ரூபாயும், காங்கிரஸ் 5 லட்சமும் அளித்துள்ளனர். மேலும் நடிகர் ரோபோ ஷங்கர் 1 லட்சத்திற்கான காசோலையை அளித்துள்ளார்.
இந்நிலையில் கோமதியின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறியுள்ள சிஎஸ்கே வீரர், ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பசித்த வயிறு.பணமில்லா வாழ்க்கை.உதவ ஒருவரும் இல்லை.ஆனால் இந்த பெண்ணின் வெற்றிக் கதை நமக்கு ஒரு பாடம்.நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு #GomathiMarimuthu ஒரு சாட்சி.Hats-off #Gomathi you are such an Inspiration to the Nation’ என்று பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜனின் இந்த ட்வீட்க்கு அவரது ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ இது வரைக்கும் தமிழில் போட்டதிலேயே உருப்படியான ட்வீட் இது தான் என்று கருத்து கூறியுள்ளனர்.