உலக கோப்பையில் களமிறங்கும் சச்சின்: ரசிகர்கள் உற்சாகம்!?
உலகக்கோப்பை தொடரில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராகப் பங்கேற்க உள்ளார்.
இங்கிலாந்து: உலகக்கோப்பை தொடரில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராகப் பங்கேற்க உள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பை தொடர் இன்று முதல் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா நாடுகள் மோதவுள்ளன.
இந்நிலையில் சரியாக இன்று மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் சச்சின் வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவர் வர்ணனையாளராகச் செயல்பட இருக்கிறார். அவருடன் இணைந்து பல முன்னணி கிரிக்கெட் நாடுகளின் முன்னாள் வீரர்களும் வர்ணனை செய்ய உள்ளனர்.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ள சச்சின் மீண்டும் உலக கோப்பையில் புதிய அவதாரம் எடுக்கிறார். இதனால் வலைதளங்களில் #SachinOpensAgain என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
வரும் ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணி – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை ஆட இருப்பது குறிப்பிடத்தக்கது.