×

ஐபிஎல் - ஆரஞ்சு கேப்பை வென்று புது சாதனை படைத்த ருதுராஜ் 

 

ஐபிஎல் 2021 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர் என்ற பெருமைக்கு இவர் சொந்தக்காராகியுள்ளார். 2வது இடத்தை பப் டு பிளேசிஸ் பிடித்தார். இவர் இந்த ஐபிஎல் தொடரில் 633 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும், அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு ஆரஞ்சு கேப் அங்கீகாரம் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆரஞ்சு கேப் வெற்றியாளராக ருதுராஜ் கெய்க்வாட் கவுரவிக்கப்பட்டார். இவர் முன்னதாக 626 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுலை பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ருதுராஜ், மதிப்புமிக்க கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள ருதுராஜ், இதுவரை 23 சிக்சர்களை விளாசியுள்ளார். நடப்பு தொடரில் மட்டும் அதிகபட்சமாக 101 ரன்களை எடுத்து அசத்தியுள்ள ருதுராஜ், ஒரு 100 ரன்களையும், 4 முறை 50 ரன்களையும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.