×

மெஸ்ஸியின் ரூமுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்... பணம், நகைகள் கொள்ளை!

 

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி. இவர் பார்சிலோனா கிளப்புக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றிகளை தேடித்தந்துள்ளார். அண்மையில் ஊதியம் கட்டுப்படியாகதாதால் அந்த கிளப்பிலிருந்து விலகி பிஎஸ்ஜி கிளப்பில் இணைந்தார். இதனால் இவர் பிரான்ஸ் நாட்டில் முகாமிட்டுள்ளார். மெஸ்ஸி தன்னுடைய குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரிலுள்ள லி ராயல் மொனிசா  ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தங்கியிருக்கிறார். இவரின் அறை பால்கனி அருகே அமைந்திருந்துள்ளது.

இச்சூழலில் கடந்த 29ஆம் தேதி இரவு அவரது அறைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்,  மெஸ்ஸி வைத்திருந்த ஆயிரக்கணக்கான யூரோ, பவுண்ட் பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர். அவர் அறையில் மட்டுமல்லாமல் மேலும் மூன்று பேரின் அறைக்குள்ளும் கொள்ளையர்கள் நுழைந்து பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதற்குப் பின் ஹோட்டல் நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் ஆய்வுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆய்வில் ஹோட்டலில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே கொள்ளை நிகழ்ந்துள்ளதாகவும், கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் தான் இவ்வாறு திட்டமிட்டு கச்சிதமாக கொள்ளையடித்திருக்கிறார்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து பார்த்ததில் பேக்குடன் இரண்டு நபர்கள் ஹோட்டலிலிருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களின் அடையாளத்தைக் கண்டறிய முடியவில்லை. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.