×

குடியாத்தம் பிரீமியர் லீக்....ஐபிஎல் ஏலத்தையே மிஞ்சும் அளவிற்கு நடந்த வீரர்கள் ஏலம்!

 

குடியாத்தத்தில் ஐபிஎல் தொடரில் ஏலம் எடுப்பது போல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்காக ஏலம் நடத்தப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

குடியாத்தம் பிரீமியர் லீக் என்ற பெயரில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றுள்ளன. நடப்பு ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், குடியாத்தம் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம், ஐபிஎல் ஏலத்தை மிஞ்சும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வட்ட மேஜைகள், ஒரே நிறத்தில் உடைகள், எல்.இ.டி. திரையில் வீரர்களின் விவரங்கள் என ஐபிஎல் ஏலம் போன்றே நடைபெற்றது. 

இந்த ஏலத்தில் 315 வீரர்கள் கலந்துகொண்டனர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த ஏலத்தில் மொத்தம் 132 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மெகா ஏலத்தில் விஜயகாந்த், சிலம்பரசன், கணேஷ் உள்ளிட்டோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஐபில் ஏலம் போல குடியாத்தத்தில், உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்காக வீரர்கள் ஏலம் விடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.