×

விஸ்வநாதன் ஆனந்த்தே வியந்து பாராட்டிய "சென்னை" சிறுவன்... 73வது கிராண்ட் மாஸ்டரானார் பரத் சுப்பிரமணியம்!

 

சர்வதேச அளவில் செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது மிக உயரிய விருதாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு நிகராக செஸ் விளையாட்டு வீரர்களால் கருதப்படுகிறது. இந்தியாவில் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த். அவரை தொடர்ந்து 70க்கும் மேற்பட்டவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளனர். அந்த வகையில் 73ஆவதாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுவன்.

இத்தாலியில் புகழ்பெற்ற வெர்கானி கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சிறுவன் பரத் சுப்ரமணியமும் கலந்துகொண்டார். இப்போட்டியில் பரத் சுப்ரமணியம் மொத்தம் உள்ள ஒன்பது சுற்றுகளிலிருந்து 6.5 புள்ளிகளைப் பெற்றார். இதன் காரணமாக தொடரின் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்தார். அதேபோல கிராண்ட்  மாஸ்டர் பட்டத்தை வெல்வதற்கான மூன்றாவது இலக்கையும் எலோ (Elo) புள்ளிகளையும் அவர் பெற்றார். அதாவது ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் எனில் 3 கட்ட கிராண்ட் மாஸ்டர் இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

போட்டிகளில் 2,500 (Elo) புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும். இதனை பூர்த்தி செய்தால் அந்த வீரருக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும். அதன்படி ஏற்கெனவே 2 கட்டங்களை பரத் சுப்பிரமணியம் பூர்த்தி செய்திருந்தார். இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் 3ஆவது கட்ட இலக்கையும் எட்டினார். அதேபோல 2,500 எலோ புள்ளிகளையும் அவர் பெற்றார். இதன்மூலம் அவர் இந்தியாவின் 73ஆவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் அவருக்கு கிடைத்தது. இந்திய செஸ் ஜாம்பவனான விஸ்வநாதன் ஆனந்த், பரத் சுப்ரமணியம் மிகவும் திறமைசாலியான சிறுவன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தியுள்ளார்.