×

டி20 உலக கோப்பை : நியூசிலாந்து-இலங்கை அணிகள் இன்று மோதல்

 

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். 

இந்நிலையில், சிட்னியில் இன்று நடக்கும் சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து- இலங்கை அணிகள்  மல்லுகட்டுகின்றன. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்துக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.  இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. இலங்கைக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா மோதல் போன்றது. தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும்.