×

பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா - இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட்

 

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. நுவானிடு பெர்னாண்டோ மட்டுமே அரைசதம் கடந்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.