×

சோயப் மாலிக்கை விவாகரத்து செய்யும் சானியா மிர்சா? 

 

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக விளங்கி வந்த சானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். மகனுக்காக சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று, மகனை கவனித்து வருகிறார். இந்நிலையில், சோயப் மாலிக்கும், சானியா மிர்சாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சானியா மிர்சாவின் சமீபத்திய சமூக வலைதள பதிவுகள் உறுதிப்படுத்தி வருகின்றன.  சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி..." என்று பதிவிட்டு இருந்தார். இதேபோல் கடந்த சில தினங்கள் முன்பு கடினமான நாள்களை கடந்து செல்லும் தருணங்கள் என்று குறிப்பிட்டு தனது மகன் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்ததோடு, சோயிப் மாலிக் இருக்கும் புகைப்படங்களை தவிர்த்து வந்தார். இதேபோல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது உண்மைதான் எனவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும், அவர்களது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.