×

டி20 உலக கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது பாகிஸ்தான்  

 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியாவும் தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்க அணி, தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடிய அந்த அணி இறுதியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சாண்டோ 54 ரன்கள் சேர்த்தார். 

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடியது. இந்நிலையில், அந்த அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.