×

இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாகும் ஹர்திக் பாண்டியா? - நியூசிலாந்து தொடரிலும் கேப்டனாக நியமனம்

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடர் முடிந்ததும், அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரிதிவி ஷா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். இளம் வீரர்கள் ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடும்ப பொறுப்புகள் காரணமாக அக்சர் படேலும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். 

டி20 தொடரில் ரோகித் சர்மா, மற்றும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் என ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடர்ந்து அசத்தி வருகிறார். இதன் காரணமாக டி20 கேப்டன் பதவியை அவரிடமே ஒப்படைத்து விடலாம் என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தலவகல்கள் வெளியாகியுள்ளன. 

டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா , வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார் உள்ளிட்டோர் இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.