×

தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று 2வது டி20 போட்டி 

 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு புனேயில் நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஜனவரி 03, 05, 07 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.  முதல் போட்டி கடந்த 03ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.