காமன்வெல்த் போட்டி : பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு 2வது பதக்கம்..
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கலம் வென்றுள்ளார்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளில் இருந்து பல்வேறு விளையாட்டு பிரிவுகளின் கீழ் 5000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை, சங்கேத் மகாதேவ் சர்கார் வென்றிருந்தார். பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதனைத்தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான குருராஜா , வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். ஆடவருக்கான 61 கிலோ எடைப்பிரிவில் பளு தூக்குதல் போட்டியில் குருராஜா, 269 கிலோ எடையை தூக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றிபெற்ற குரு ராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.