×

தொடரை கைப்பற்ற இந்தியா தீவிரம் - பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்?

 

தொடரை கைப்பற்றும் வகையில், இலங்கைக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.  முதல் போட்டி கடந்த 03ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி வரை வெற்றிக்காக போராடிய போதும் இலங்கை அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.   

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைபற்றும் வகையில் இந்திய அணியில் இன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி தொடக்க வீரராக தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில்லுக்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட் களமிறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் கடந்த போட்டியில் 3 நோ-பால்களை வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹர்ஷல் பட்டேல் அணியில் இறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் உத்தேச பட்டியல் : இஷான் கிஷான், ருத்துராஜ் கெய்க்வாட்,  சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்ஷல் பட்டேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.