×

”சூரரைப் போற்று “- கேப்டன் கோபிநாத் கதை! நம்பிக்கையை விதைக்கும் படம்

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாக உள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள, இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர்
 

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள, இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் வெளியீடு திடீரென தள்ளிப்போனது.இந்த நிலையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 12ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்தக் கதை கேப்டன் கோ. ரா. கோபிநாத் என்பவரின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கேப்டன் கோ. ரா. கோபிநாத், எளிய மனிதர்களும் விமானத்தில் பறக்கட்டும் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஏர் டெக்கான் என்னும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தை ஐந்து கோடி ரூபாயில், ஒரு விமானத்துடன் தொடங்கியவர். முதலில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி, அதன் பின்னர் விமான சேவையில் இறங்கினார். 2003 ஆம் ஆண்டு ‘ஏர் டெக்கான்’ விமான சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார். தோராயமாக ஒரு சதவிகித இந்திய மக்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்து வந்த நிலையில், எளிய மனிதர்களும் பயணம் செய்யும் வகையில், குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து பலருக்கு எட்டாக் கனியாக இருந்த விமான பயணத்தை சாத்தியமாக்கினார்.

வேகமாக வளர்ந்த அந்நிறுவனம் குறைந்த கட்டணத்தில் பயணச் சீட்டு விற்றதால், வளர்ந்த வேகத்திலேயே சில வருடங்களில் வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பின்னர் விஜய் மல்லையாவின், கிங்ஃபிஷ்சர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவருக்கு உதவ எண்ணி, முதலீடு செய்து மேலும் வளர்ந்தது. அதன் பின்னர் கிங்பிஷர் நிறுவனமும் நஷ்டத்தை சந்தித்து சேவையை நிறுத்தியது. 1951, நவம்பர் 13 அன்று கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில், எட்டு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தவர் கோபிநாத். பள்ளி ஆசிரியரான இவரது தந்தை, தனது மகனுக்கு பள்ளியில் சென்று படிக்கும் ஏட்டுக்கல்வி வேண்டாம் என நினைத்து, 10 வயது வரை வீட்டிலேயே தனது மகனுக்கு கல்வி கற்றுக்கொடுத்தார். பின்னர் 10 வயதில் நேரடியாக அரசு பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

பள்ளிக்காலத்தில் ராணுவத்தில் சேர கனவு கண்ட கோபிநாத் தனது குடும்பத்தினர் ஆதரவுடன் பிஜாப்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் 1962 ஆம் ஆண்டு சேர்ந்தார். கடின உழைப்புக்கு பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் தேர்ச்சி பெற்று ராணுவ பயிற்சிக்கு தயாரானார். பிறகு இந்திய ராணுவ அகாடெமியில் தனது படிப்பை முடித்தார். அதன் பிறகு தனது கனவான ராணுவப்பணியில் சேர்ந்த அவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச சுதந்திர போரில் பங்கேற்றார். 20 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர், 8 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 28 ஆவது வயதில் தொடங்கிய பயணம்தான் விமான நிறுவனம்.

அந்த தோல்வியிலும் மனம் தளராத கோபிநாத் தோல்வி தந்த பாடங்களை மனதில் வைத்து, மீண்டும் வான்வழி போக்குவரத்து துறையையே தனது பிரதான தொழில் களமாக அமைத்துக்கொண்டார். 2009 ஆம் ஆண்டு ‘டெக்கான் 360’ என்ற பெயரில் சரக்கு விமான சேவையை தொடங்கினார். இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவையாக உதான் திட்டங்கள் தொடங்கப்பட்டபின், மீண்டும் ஏர் டெக்கான் சேவையை சில நகரங்களுக்கு அளித்து வருகிறார். தற்போது குறைந்த கட்டண சேவைகளை வழங்கும் விமான சேவைகளுக்கு கோபிநாத்தே முன்னுதாரணமாக இருந்து வருகிறார் என்றால் மிகையில்லை. இப்போதும், தனது 68 ஆவது வயதிலும் இளமை துடிப்புடன் பயணித்து கொண்டிருக்கிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தற்போது உருவாகியுள்ள படம்தாம் சூரரை போற்று.

எத்தனை சரிவுகளைக் கண்டாலும், மீண்டும் எழுந்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்தல், என்ற நம்பிக்கை விதைக்கும் இந்த படம். எளியவர்களுக்காக செய்த சிறு முயற்சியை பாராட்டு முயற்சி என இப்போதே வரவேற்பு எழுந்துள்ளது. இந்த படம் கனவுகளை நோக்கி ஓடும் இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை அளித்தால், அதுவே மிகப்பெரிய வெற்றியாகவும் அமையும் என்றே சொல்லலாம்!