‘செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தரம் குறைப்பதா? தமிழகத்துக்கு செய்யும் துரோகம் ‘ – தொல்.திருமாவளவன்
சென்னையில் இருக்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஒரு துறையாக மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஒரு துறையாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது செம்மொழித் தமிழை அவமதிப்பது மட்டுமின்றி தமிழ் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
மைசூரில் இருக்கும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தை மத்திய பல்கலை கழகமாக தரம் உயர்த்த போவதாகவும் அதில் ஒரு துறையாக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சேர்க்க விரும்புவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது செம்மொழி தமிழுக்கு செய்யப்படும் மிகப்பெரிய அவமதிப்பாகும். கடந்த ஆண்டு ஒரே நாளில் சமஸ்கிருதத்திற்கு என 3 முக்கிய பல்கலைக்கழகங்களை 2019 டிசம்பரில் பாஜக அரசு அமைத்தது. சமஸ்கிருதத்திற்கு முன்பே செம்மொழித் தகுதி பெற்ற தமிழின் வளர்ச்சிக்காக இதுவரை எதையும் செய்யவில்லை. அதற்கு மாறாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இப்போது மைசூரில் செயல்பட்டு வரும் இந்திய மொழிகளின் நடுவண் மையத்தின் ஒரு துறையாக மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக செம்மொழி நிறுவனத்தை மாற்றுவதற்கு முயற்சித்தார்கள். கடுமையான எதிர்ப்பு இருந்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டனர். இப்போது மைசூரில் உள்ள இந்நிறுவனத்தின் துறையாக செம்மொழி நிறுவனத்தில் மாற்றுவதென்பது தமிழுக்கு செய்யப்படும் அவமதிப்பு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இந்த தமிழ் விரோத முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சமஸ்கிருத மொழிக்கு செய்ததைப் போல ஒரு மத்திய பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.