‘அந்தரங்க புகைப்படங்களை திருடிய பேராசிரியர்’ : தொடர் மிரட்டலால் மாணவி தற்கொலை முயற்சி!
ஜெனிபரின் தற்கொலை முயற்சிக்கு கல்லூரி பேராசிரியர் ஒருவரே காரணம் என்று மாணவிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் கொடுத்த மன உளைச்சலைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் தனது வாழ்க்கையை முடித்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீண்டும் திருச்சியில் ஒரு மாணவி பேராசிரியர் ஒருவரால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காஜா மலைப்பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாணவி ஜெனிபர் என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெனிபர் விடுதி அறையில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட சக மாணவிகள் அதிர்ச்சி போக, உடனே அவரை மீட்டு திருச்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஜெனிபரின் தற்கொலை முயற்சிக்கு கல்லூரி பேராசிரியர் ஒருவரே காரணம் என்று மாணவிகள் குற்றச்சாட்டியுள்ளனர். பேராசிரியர் மாணவ, மாணவிகளின் செல்போனில் உள்ள புகைப்படங்களையும், அவர்களது அந்தரங்க விவரங்களையும் எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வருவதாகவும், அதை வைத்து மாணவிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறியுள்ள சக மாணவர்கள், சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமூகத்தில் இருக்கும் பல்வேறு தடைகளை தாண்டி, கல்வியில் சாதிக்க பெரும் கனவுகளுடன் வரும் மாணவர்களின் பாதுகாப்பை கல்வி நிறுவனங்களும் இந்த சமூகமும் உறுதி செய்து தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகிறது.