பிறந்து இரண்டே நாட்களான குழந்தை: மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த பரிதாபம்..!
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சிகிச்சை, மகப்பேறு என அனைத்திற்கும் அரசு மருத்துவ மனைகளையே நம்பியுள்ளனர்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சிகிச்சை, மகப்பேறு என அனைத்திற்கும் அரசு மருத்துவ மனைகளையே நம்பியுள்ளனர். அரசு மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த நபர்களின் கதைகள் பல. அரசு மருத்துவர்களின் அலட்சிய போக்கால், ‘காசு போனா போது’ என்று எண்ணி பலர் தனியார் மருத்துவ மனைகளிலே சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பிறந்து இரண்டே நாள் ஆன குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கரிமேடு கிராமத்தில் மோகன் குமார்- கிரிஜா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். மோகன் குமார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், கிரிஜாவை பிரசவத்திற்காக காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி என்னும் இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளார். அனுமதித்த உடனேயே கிரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைந்தனர் கிரிஜா மற்றும் மோகன் குமார். பிறந்து ஒரு நாள் வரை குழந்தை ஆரோக்கியமாக இருந்துள்ளது. திடீரெனெ இரண்டாம் நாள் இரவு குழந்தை தாய்ப்பால் அருந்தவில்லை என கிரிஜா மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் தெரிவித்துள்ளார். அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி அன்றிரவு முழுவதும் குழந்தைக்கு என்னவாகியது என்று மருத்துவர்கள் பார்க்கவில்லை என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு ஒழுங்காக மருத்துவம் பார்க்காததால், குழந்தையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிரிஜா குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கதறி அழுதுள்ளார். அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிறப்பாக நடக்கும் என நம்பி வந்த எங்களுக்கு, எங்கள் குழந்தை உயிர் பறிபோனது தான் மிச்சம். அலட்சிய போக்கோடு செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிரிஜாவும் அவரது குடும்பத்தினரும் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.