பயன்படாத ஆழ்துளை கிணறுகளை சொந்த செலவில் மூட முன்வந்த இளைஞர்: குவியும் பாராட்டு!
பயன் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழக குடிநீர் வடிகால் வாரியம் ஆணையிட்டுட்டுள்ளது
ஈரோடு: பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை இலவசமாக மூடும் பணியை இளைஞர் ஒருவர் தனது சொந்த செலவில் செய்து தருகிறார்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் 5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டெடுக்கப்பட்டான். இதையடுத்து சுஜித்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தையை மீட்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு இரவு பகல் பாராமல் உழைத்த அத்தனை பேருக்கும் சுஜித்தின் மரணம் மீளா துயரை தந்துள்ளது. இதையடுத்து பயன் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழக குடிநீர் வடிகால் வாரியம் ஆணையிட்டுட்டுள்ளது.
பல ஆயிரம் ரூபாய் செலவிட்டுத் தோண்டப்படும் இந்த ஆழ்துளைக் கிணறுகளை மூடவும் செலவாகும் என்பதால் பலரும் இதை மூடாமல் கிடப்பில் போட்டு விடுகின்றனர். அதன் காரணமாகவே சுஜித் போன்ற பல பிஞ்சு உயிர்கள் பலிவாங்கப்படுகிறது.
இந்நிலையில் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணியை இலவசமாகச் செய்ய ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். எலக்ட்ரிக்கல் மற்றும் பிவிசி பைப் விற்பனை கடை நடத்திவரும் இவர் பயன்படாத ஆழத்துளை கிணறுகளை இலவசமாக மூடி வருகிறார். இதுகுறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட அவரை அப்பகுதியை சேர்ந்த பலரும் தொடர்பு கொண்டுள்ளனர். அதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 20 விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை சொந்த செலவில் மூடியுள்ளார். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.