பத்திரிகையாளர்களை தரக்குறைவாக நடத்திய காவல்துறை! கண்டிக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்!!
கொரோனா காலத்தில் உயிரை பணையம் வைத்து பணியாற்றும் பத்திரிகையாளர்களை எந்த காரணமும் சொல்லாமல், காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் காவல் ஆணையரிடம் கோவை அனைத்து பத்திரிகையாளர்கள் மன்றம் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை (Simplicity) சிம்ப்லிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் புகைபட கலைஞர் பாலாஜி என்பவரை இன்று காலை உதவி ஆணையர் ராமசசந்திரன் விசாரணைக்கு வர சொல்லி உதவி இருக்கின்றனர். விசாரணைக்கு காவல் நிலையம் வந்த பாலாஜியிடம் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் பாலாஜியை அமர வைத்துள்ளார். புகைபட கலைஞர் பாலாஜியை காவல் நிலையத்தில் உட்கார வைத்த தகவல் அறிந்த சக பத்திரிகையாளர்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போது உடன் இருந்த சிம்ப்லிசிட்டி செய்தியாளர் ஜெரால்ட்டையும் விசாரணைக்கு என அழைத்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் ராமசந்திரன் உட்கார வைத்துள்ளார். எதற்காக பத்திரிகையாளர்களிடம் விசாரணை என அனைத்து செய்தியாளர்களும் காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியும் காவல் துறையினர் பதில் அளிக்கவில்லை. இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் இரு பத்திரிகையாளர்களையும் காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய ஆய்வாளர் கனகசபாபதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் கிளம்பினார். பத்திரிகையாளர் இருவரும் என்ன தவறு செய்தார்கள் ? எதற்காக காவல் வாகனத்தில் ஏற்றி செல்கின்றீர்கள்!? என ஆய்வாளர் கனகசபாபதியிடம் கேட்ட போது அவர் உரிய பதில் அளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் இருவரையும் நாங்களே காவல் நிலையம் அழைத்து வருகின்றோம் மூத்த செய்தியாளர்கள் ஆய்வாளர் கனகசபாபதியிடம் கேட்ட போதும் அவர் அனுமதிக்க மறுத்து , காவல் வாகனத்தில் இருவரையும் ஏற்றி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக இரு பத்திரிகையாளர்களை குற்றவாளிகள் போல கோவை மாநகர காவல் துறை நடத்துகின்றது என்று தெரியவில்லை.
பத்திரிகையாளர் ஜெரால்ட், பாலாஜி ஆகியோரை கோவை மாநகர காவல் துறை தரக்குறைவாக நடத்தும் போக்கினை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது. கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சிம்ப்லிசிட்டி நிறுவனம் செய்தி வெளியிட்டதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த தவறுமில்லை. ஆனால் இரு பத்திரிகையாளர்களை எதற்காக விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர் என்பதை கூட கூறாமல் கோவை மாநகர காவல் துறை , இரு பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக நடத்துவது மோசமான செயல் என்பதை சுட்டிகாட்டுகின்றோம் கோவை மாநகர காவல் துறையின் இத்தகைய நடவடிக்கையினை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மீண்டும் , மீண்டும் கண்டிப்பதுடன், கோவை மாநகர காவல் துறையின் இது போன்ற செயல்பாடுகள் ஊடகங்களுக்கு பாதுகாப்பற்ற , அச்ச உணர்வை இந்த சூழல் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதையும் சுட்டிகாட்டுகின்றோம். கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் காலத்தில் பத்திரிகையாளர்கள் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் சூழலில் கோவை மாநகர காவல் துறை இத்தகைய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இரு பத்திரிகையாளர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கின்றது” என குறிப்பிட்டுள்ளது.