தாழிட்ட கதவைத் திறக்கும் ஜாலம்!
பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படும் போகர் சித்தர் அருளிய ஜாலங்களை பற்றி விரிவாக பார்போம்.
சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், ஜோதிடம்,மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்
சித்தர்கள் இயற்கையை கடந்த சக்திகள் உடையவர்கள் என்று சிலர் கூறுவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர்.
இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றனர் .
சித்தர்கள் கூறியுள்ள பல விஷயங்கள் நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில் தள்ளுவனவாகவும் இருக்கின்றன இதை ஜாலவித்தைகள் என்கின்றனர்.
அதே போன்று பூட்டிய கதவைத் திறக்கும் இந்த ஜாலம் போகர் அருளிய “போகர் 700” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
ஜால வித்தைகளின் உண்மைத் தன்மை மற்றும் அவை அருளப் பட்டதன் நோக்கம் தொடர்பில் பலருக்கும் பல்வேறு வகையான விமர்சனங்கள் உண்டு.
நமது நோக்கம் தகவல் பகிர்வு மட்டுமே என்பதால், இந்த பதிவினை அந்த அளவில் மட்டும் அணுகிட வேண்டுகிறோம்.
இனி போகரின் வரிகளில் தாழிட்ட கதவைத் திறக்கும் ஜாலத்தை பார்ப்போம்.
மறந்திடாது ஆதிவாரம் தன்னை ஓர்
மைந்தனே கல்லெலியின் வளைதான் ஒக்கே
வளைநோக்கி ஆதிநாளிரவு தன்னில்
மைந்தனே அவ்விடத்தில் சென்றே நீதான்
வளைதேடி தீபத்தை ஏற்றி வைத்து மறைந்து
வாயிலே கவ்விக் கொண்டோடும் போது
வளைமூடி அடைத்திருந்த கற்கள் எல்லாம்
மைந்தனே மேலோடிப் போமே
போமென்ற கல்லெலிதான் வெளியில் வந்து
புகழ் பெரிய வேரதனைக் கக்கி வைக்கும்
ஆமென்ற இரை தேடி மேயப் போகும்
அச்சமயம் தீபத்தை வெளியில் விட்டு
தாமென்ற வகைஎடுத்து சாம்பிராணியின்
தனித் தூபம் காட்டி வேரதனைக் கொண்டு
காமென்ற தாள் பூட்டும் கதவின் முன்னே
காட்டினால் தான் திறக்கும் புதுமைதானே
எலிகளில் மூஞ்சூறு, சுண்டெலி, பெருச்சாளி, வெள்ளெலி, கல்லெலி, சரெவெலி, வயல் எலி, வீட்டெலி என பல வகைகள் உண்டு. போகரின் இந்த ஜாலத்தில் குறிப்பிடப் படும் எலியின் பெயர் கல்லெலி என்பதாகும்.
இவை பெரும்பாலும் வயல் வரப்புகளில் வளை அமைத்து வாழக் கூடியவை. மற்ற எலிகளைப் போல் இல்லாமல் இவை தங்கள் வளைகளின் வாசலை சிறு கற்களைக் கொண்டு மூடி இருக்குமாம். அதனலால் இந்த எலிகள் கல் எலி என அறியப் படுகிறது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவில், கல்லெலியின் வளையைத் தேடிக் கண்டுபிடித்து அதன் அருகே ஒரு தீபத்தை ஏற்றி மறைத்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டுமாம்.
வளைக்குள் இருந்து இரை தேடி வெளியே கிளம்பும் கல்லெலியானது தன் வாயில் ஒரு மூலிகை வேரினை கவ்விக் கொண்டு கிளம்புமாம். வளையின் வாயிலை எலி நெருங்கியதும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கற்கள் எல்லாம் உருண்டோடி வளையின் வாசல் திறந்து கொள்ளும் என்கிறார்.
வெளியில் வந்த கல்லெலி தன் வாயில் இருக்கும் மூலிகை வேரைக் கக்கி விட்டு இரைதேடிப் போய்விடுமாம். இந்த சமயத்தில் தீப ஒளியின் துணையோடு அந்த வேரைக் கண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இந்த வேருக்கு சாம்பிராணித் தூபம் போட்டு பூட்டியிருக்கும் கதவின் முன்னே காட்டிட பூட்டியகதவு தானாக திறந்து கொள்ளும் என்கிறார்.