டாஸ்மாக்கை திறக்க நீதிமன்றத்தில் வாதாடும் அரசு.. தாங்குமா தமிழகம்: கமல்ஹாசன் ட்வீட்!
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ எட்டியுள்ளது. இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் தீவிரமாகிக் கொண்டே வந்து கொண்டிருப்பினும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் 5,000ஐ நெருங்கிக் கொண்டே வருகிறது.
இதனிடையே டாஸ்மாக் மூடப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விமர்சித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.